அமைச்சர் சந்திரசேகர் இன்று சிலருடைய பெயர்களைக் குறிப்பிட்டு இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய வட்டுக்கோட்டை மண்ணையும் தாங்கள் கைப்பற்றுவோம் என்று கூறியிருக்கின்றார். அமைச்சர் சந்திரசேகர் அவர்களே! உங்களுக்கு ஒரு பகிரங்க சவால் விடுக்கின்றோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றிய எமது மண்ணில் அண்ணன் கஜேந்திரகுமாரின் சைக்கிள் சின்னத்தை விட உங்கள் கட்சி ஒரு வாக்குத் தானும் கூடுதலாக எடுத்தால் அண்ணனின் தம்பியாகிய நான் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியப் பேரவையின் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் இன்று சனிக்கிழமை (03.05.2025) மாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இளங்கதிர் மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தத் தேர்தலில் ஜேவிபி சவப்பெட்டிகளுக்குள் அடக்கம் செய்யப்படும். அது வடக்கு- கிழக்கு எங்கும் தீயாகப் பரவும். ஜேவிபியின் முடிவு எங்கள் கரங்களால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. சந்திரசேகர் அவர்களே! உங்களுடைய தேசம் இதுவல்ல! இது தமிழர்களின் தேசம். மாவீரர்களின் தேசம். எங்கள் மக்களுடைய தேசம். இந்தத் தேசத்தை ஆக்கிரமிக்க முற்படுகின்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு எமது மக்கள் சொல்லக் கூடிய செய்தி வடக்கு- கிழக்கில் சிங்களக் கட்சிகளுக்கு இடமில்லை. இந்தச் செய்தியை எங்கள் மக்கள் ஆணித்தரமாகச் சொன்னால் மாத்திரம் தான் இந்த மண்ணில் தமிழ் வாழும். இனம் ஆளும்.
அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அண்ணன் கஜேந்திரகுமார் தலைமையில் எங்கள் அணி தயாராகவிருக்கிறது. இறுதிவரை நாங்கள் எங்கள் மக்களுக்காக முன்நிற்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.