கொள்கைப் பற்றுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்: யாழில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தில்  சிங்களக் கட்சிகளுக்கு அறவே வாக்களிப்பதைத் தவிர்க்குமாறு கோரியும், கொள்கைப் பற்றுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியும் இன்று சனிக்கிழமை (03.05.2025) யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை (02.05.2025) வவுனியா இலுப்பைப்பையடிச் சந்தியில் குறித்த துண்டுப் பிரசுர விநியோகம் ஆரம்பமான நிலையில் தொடர்ச்சியாக வவுனியாவில் நேற்று மாலை வரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக இன்று காலை கல்வியங்காடு மற்றும் திருநெல்வேலிப் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும், முற்பகல்-11 மணியளவில் யாழ்.நகரின் மத்தியிலும் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் செல்வரட்ணம் தனுபன் தலைமையில் விநியோகிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.