வெப்பமான காலநிலை இம் மாத இறுதி வரை நீடிக்கும்!

நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு- வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை(20.04.2023) அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்றப் பணிப்பாளர் அனுஷ வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

அந்த மாகாணங்களுக்கு மேலதிகமாக மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களும் தண்ணீர் அருந்துவது அத்தியாவசியமானது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.