தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி விலகினார்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர். அனுர மனதுங்க தனது பதவியிலிருந்து  விலகியுள்ளதாகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் காணி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு விகாரை அமைந்துள்ள காணி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இதுதொடர்பில் ஜனாதிபதி தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மனதுங்க மேற்படி விகாரை தற்போது 72 ஏக்கர் காணி பரப்பைக்  கொண்டுள்ளது. இதனைத் தவிர மேலும் 275 ஏக்கர் பரப்பு நிலம் விகாரை சார்பில் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும், இதனை மறுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேத்தவனாராமய, மஹா விகாரை மற்றும் அபயகிரி விகாரை என்பனவற்றை இணைத்துப் பார்த்தாலும் 100 ஏக்கர் காணியே இருக்கும்.

அவ்வாறெனில் குறித்த விகாரைகளை விடவும் அளவில் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு விகாரை பெரியதா? எனக் கேள்வி எழுப்பினார்.

வரலாற்றை நீங்கள் எனக்கு கற்றுத் தருகின்றீர்களா? இல்லை நான் உங்களுக்கு கற்றுத்தர வேண்டுமா? எனவும் ஜனாதிபதி கடுமையாக அவரைச் சாடியிருந்தார்.

இதேவேளை, இதுதொடர்பில் காணொளி சமூக வலைத்தளங்களில் இன்றைய தினம் வெளியாகியிருந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தமது பதவியிலிருந்து விலகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.