கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான பழிவாங்கல்கள் தமிழினம் மீதான இனவழிப்பின் ஒரு அங்கமே!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், சிறீலங்கா நாடாளுமன்றிற்கான யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும், அவரது கட்சிச் செயற்பாட்டாளர்களினதும் கைதுகள் மற்றும்  அதனோடிணைந்த நிகழ்வுகள் இனரீதியான பழிவாங்கல் நிகழ்வுகளின் ஒரு அங்கமே எனத் தமிழ் சிவில் சமூக அமையம் நிச்சயமாகக் கருதுகின்றது எனத் தெரிவித்துள்ள தமிழ் சிவில் சமூக அமையம் இவ்வாறான நிகழ்வுகள் இனரீதியான ஒதுக்கல், பழிவாங்குதல் நிகழ்வுகள், அழிப்புக்கள் எனப்  பல்வேறு வகைகளில் கடந்த 75 வருடங்களாக இனவழிப்புக்குள்ளாகி வருகின்ற தமிழினத்துக்குப்  புதியதல்ல எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.  

இதுதொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் இன்று வியாழக்கிழமை (08.06.2023) நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.    

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேலான பழிவாங்கல்கள் தமிழினம் மீதானதொடரும் இனவழிப்பின் ஒருஅங்கமே. தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் சிறீலங்கா பாராளுமன்றிற்கான யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களதும் அவரது கட்சிச் செயற்பாட்டாளர்களினதும் கைதுகள் மற்றும் அதனோடிணைந்த நிகழ்வுகள் இனரீதியானபழிவாங்கல் நிகழ்வுகளின் ஒரு அங்கமே என தமிழ் சிவில் சமூக அமையம் நிச்சயமாகக் கருதுகின்றது.

இவ்வாறான நிகழ்வுகள் இனரீதியான ஒதுக்கல்,பழிவாங்குதல் நிகழ்வுகள்,அழிப்புகள் என பல்வேறு வகைகளில் கடந்த 75 வருடங்களாக இனவழிப்புக்குள்ளாகி வருகின்ற தமிழினத்துக்கு புதியதல்ல.  எமது கண்டனங்கள் எவையும் இந்த நிலையை மாற்றப் போவதும் இல்லை. ஆனாலும் இந்தக் கைதுகளை தமிழ் சிவில் சமூகஅமையம் வன்மையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமது தார்மீக ஆதரவையும் தெரிவிக்க விரும்புகின்றது.

சாதாரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என்ற யதார்த்தம் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரதிநிதித்துவ அரசியலின் போதாமையினைத் தமிழ் மக்களுக்கு ஞாபகமூட்டுவதாகஅமைகின்றது.

தொடர்ந்தேர்ச்சியாக தமிழர் பிரதேசம் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளமையைக் கேள்விக்குட்படுத்தி வரும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைக் கைது செய்தமையை தமிழ் சிவில் சமூகத்தினருக்கும் ஏனைய தமிழ்ச் செயற்பாட்டாளர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவுமே பார்க்க வேண்டியுள்ளது. இதுதொடர்பிலும் தெற்கின் குறிப்பாக கொழும்பின் சிவில் சமூகம் பெரும்பாலும் வாய் மூடி மௌனிகளாக இருப்பது ஆச்சரியத்தைத் தராவிட்டாலும் தொடர்ந்து ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து இன்னும் மீளாத இந்தச் சந்தர்ப்பத்திற்கூட சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆட்சி  இயந்திரமான சிறீலங்கா அரசு தமிழினத்தின் உரிமைகளை நசுக்குவதை இறுதிவரை கைவிடாது என்பதை இந்தக் கைதுகளும் அதனோடு தொடர்புபட்டதான அண்மைய நாள்களின் நிகழ்வுகளும் மீண்டும் ஒருதடவை தமிழ் மக்களுக்கு நினைவூட்டுகின்றன.


சிங்கள பௌத்த பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய பிரதிநிதியாயிருப்பினும் கூட தமிழராயின் அவருக்கு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்  உரிமைகள் அரசு எந்திரமான பொலிசாரால் மட்டுமல்ல பாராளுமன்றத்தாலும் கூட வழங்கப்படமாட்டாது என்பதை நெற்றிப்பொட்டிலடித்தது போல இச்சம்பவங்கள்  ஊடாக தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராயினும்  தமிழராயின் அவருக்கு தனது சொந்த மக்களை சந்திப்பதற்கு உரிய உரிமையுமற்ற நிலையே இத்தீவில் நிலவுவதும் அதுவும் விளையாட்டு உபகரணங்களைதான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கு வழங்குவதற்கான ஒரு சாதாரண கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்துவதாயின்  கூட  ஒற்றர்களும் உளவாளிகளும் உருமறைப்பில் வருவர். பதிவுகளை மேற்கொள்வர்.  அதன் வழி கலந்துகொண்டவர்களை அச்சுறுத்துவர், பழிவாங்குவர் என்ற தீவிரநிலையில் தான் தமிழர்களின் தாயகமுள்ளதுவும் அப்பட்டமாக இந்தநிகழ்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழர் தாயகம் எந்தஅளவுக்கு உளவுப்படைகளின்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது என்பதும்  தமிழ் மக்களின் உரிமைக்கு விட்டுக் கொடாது குரல் கொடுப்பவர்கள் மீது சிறீலங்கா அரசின் படையக் கட்டுமானங்களும் சட்டங்களும் எவ்வாறு கொடூரமாகப்பாயும் என்பதையும் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமிழ்த் தேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  சிங்களப் பேரினவாத அமைப்புகளைப்  போல எவ்வாறெல்லாம் வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டுவர் என்பதையும் இந்த நாள்களின் நிகழ்வுகள் தமிழ் மக்களுக்கு மீள ஒருமுறை நிகழ்த்திக் காட்டுவனவாக உள்ளன.

சிறீலங்கா அரசின் 75 வருட நீதியற்ற காட்டாட்சியின் கீழ் தமிழ் மக்கள் எவ்வாறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள், எதனால் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்குத் தள்ளப்பட்டார்கள், எதனால் அவர்கள் தமக்கான நீதியை தீவிற்கு வெளியில் தேடுகின்றார்கள், தமக்கு 75 ஆண்டுகளாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் கொடூரங்கள் படுகொலைகளடங்கிய இனவழிப்புக்கு எதிராக எதற்காக சரவதேச விசாரணையைக் கோருகின்றார்கள் என்பவற்றுக்கான விளக்கமாக இந்தநிகழ்வுகள் அமைந்துள்ளன.

சர்வதேச சமூகமும் தற்போதைய நிலைக்குக் கூட்டுப் பொறுப்பாளிகள் என்பதனை ஞாபகப்படுத்துகின்றோம்.  இலங்கைஅரசு தொடர்பில் அவர்கள் கடைபிடிக்கும் மென்போக்கு தமது சொந்த தேசிய, புவிசார் நலன்களின் பாற்பட்டதுமட்டுமே என்பதனைநாம் அறிவோம். அதற்கு அப்பால் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மானிட மாண்புகளைப் பேணல் என்பதெல்லாம் மேம்போக்கான பூசிமெழுகுதல்கள்  மட்டுமே என்பதனையும்  நாம் அறிவோம். எனவே தமிழ் மக்கள் தொடர்பிலோ, அவர்களது மனிதஉரிமைகள் தொடர்பிலோ தமக்கு அக்கறை இருப்பது போல் தமிழ் மக்களுக்கு போலி நம்பிக்கைகளை மட்டும் தருவதை தொடராது இனியாவது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் சர்வதேச சமூகத்தை வினயத்துடன் வேண்டுகின்றோம்.


(ஒப்பம்)

அருட்பணி வீ.யோகேஸ்வரன்

இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூகஅமையம்


(ஒப்பம்)

பொ. ந. சிங்கம்

இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூகஅமையம்