கைலாசவாகனத்தில் சிவலிங்கப் பெருமானுடன் தெல்லிநகர் துர்க்காதேவி வீதி உலா

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்தப் பெருவிழாவின் கைலாச வாகனத் திருவிழா இன்று சனிக்கிழமை(26.08.2023) மாலை சிறப்பாக இடம்பெற்றது. 

இன்று மாலை-05 மணியளவில் வசந்தமண்டபப் பூசைகள் ஆரம்பமாகி நடைபெற்றதைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் சிவலிங்கப் பெருமான் சமேதரராகவும், விநாயகப் பெருமான், முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்களும் உள்வீதியில் எழுந்தருளி வலம் வந்தனர்.

இரவு-07 மணியளவில் நாற் தெய்வங்களும் ஆலய முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த  கைலாசவாகனத்தில் எழுந்தருளினர். 

விசேட தீபாராதனை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலயத்தின் காண்டாமணி ஒலிக்க, அடியவர்களின் அரோகராக் கோஷங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க இரவு-07.15 மணியளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கைலாசவாகனத்தின் வீதி உலா ஆரம்பமானது. 



கைலாசவாகனத் திருப்பவனி ஆரம்பமாகும் போது ஆலயத்தின்  கோபுரத்திலிருந்து பூமாரி தூவப்பட்டது.

கைலாசவாகனத்தை ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து வடம் தொட்டிழுத்தனர். அத்துடன் துர்க்காபுரம் மகளிர் இல்லச் சிறார்களும், அடியவ்ர்கள் பலரும் பஜனை பாடியவாறு கைலாசவாகனத் திருப்பவனியில் கலந்து கொண்டனர்.
கைலாசவாகனத் திருப்பவனி இடம்பெற்ற போது 40 இற்கும் மேற்பட்ட மாதர்கள் இருமருங்கிலும் கற்பூரச் சட்டிகள் ஏந்தியவாறும், சில ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை எடுத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றினர்.    


 
இதேவேளை, பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கைலாசவாகனத் திருப்பவனியில் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)