இலவச யோகக் கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு அடுத்த மாதம் நல்லூரில் ஆரம்பம்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை அடிப்படைக்  கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் அடுத்த மாதம்-23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-06 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.  

சனி, ஞாயிறு தினங்களிலும், அரச விடுமுறை தினங்களிலும் காலை-06 மணி முதல் காலை-08 மணி வரை நடைபெறும் இவ் வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண், பெண் இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ள முடியும்.

சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கை நெறியைப்  பூரணமாக முடிப்பவர்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படவிருக்கின்றன. பயில விரும்புவோர் வடமாகாணக் கல்வி அமைச்சிலோ அல்லது அதன் இணையத்தளத்திலோ விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கல்வி அமைச்சு,  வடமாகாணம், இளைஞர் விவகார அலகு, செம்மணிவீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பிவைக்குமாறும், மேலதிக தகவல்களை 0212222203 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார்.