கரவெட்டி பிரதேசசபையின் துடுப்பாட்டப் போட்டியில் சம்பியனானது வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி

 


உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் பதிவு செய்யப்பட்ட சனசமூக நிலையங்களுக்கிடையிலான  மென்பந்து துடுப்பாட்டப்போட்டி மார்கழி மாதம் 23, 24 ஆகிய தினங்களில் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடாத்தப்பட்டது.


மேற்படி போட்டிகளில் பங்குபற்றுவதற்காக 09 சனசமூக நிலையங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் 07 சனசமூக நிலையங்கள் முதற்சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றியிருந்தன.


வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் செயலாளரான ஹம்சநாதனின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விளையாட்டு நிகழ்வில், முதலாவது அரையிறுதிப் போட்டியில் மண்டான் சனசமூக நிலைய அணியை எதிர்த்து கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலைய அணி விளையாடியது. இதில்  கலாவாணி சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று இறுதியாட்டாத்திற்கு தகுதிபெற்றது. அடுத்த அரையிறுதி ஆட்டத்தில் வடகருணை வளர்மதி சனசமூக நிலைய அணியை எதிர்த்து வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி விளையாடியது. இதில் வதிரி வட்டுவத்தை சனசமூகநிலைய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. 


இறுதிப்போட்டியில் கலாவாணி சனசமூக நிலைய அணியை எதிர்த்து வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி மோதியது. இதில் வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சாகித்தியன் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக ராம்ஜூத் தெரிவுசெய்யப்பட்டார்.


கலாவாணி சனசமூகநிலைய அணி இரண்டாமிடத்தைப்பெற்றுக்கொண்டது. மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் மண்டான் சனசமூகநிலைய அணியை எதிர்த்து வடகருணை வளர்மதி  சனசமூக நிலைய அணி மோதியது. இதில் வடகருணை வளர்மதி சனசமூகநிலைய அணி வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. மண்டான் சனசமூகநிலைய அணி நான்காமிடத்தை பெற்றுக்கொண்டது.


இறுதி நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் அவர்களால் வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வெற்றிப்பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.