'ஊடக சிகரம்' தில்லைநாதனுக்கு வடமராட்சியில் கௌரவிப்பு!

 


மூத்த பத்திரிகையாளர் சின்னத்துரை தில்லைநாதனுக்கு ஊடக சிகரம் எனும் சிறப்பு கௌரவம் வழங்கி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தினரால் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான சிற்பபு விருது வழங்கும் விழாவில் வடமராட்சி மண்ணின் மைந்தனும் மூத்த பத்திரிகையாளருமான சின்னத்துரை தில்லைநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் பருத்தித்துறையில் உள்ள அலுவலகத்தில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தினரால் 'ஊடக சிகரம்' எனும் சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது. 

வடமராட்சி புலோலியைச் சேர்ந்த சின்னத்துரை தில்லைநாதன் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் பத்திரிகை வீரகேசரியின் பிராந்திய செய்தியாளராக தொடர்ச்சியாக பணியாற்றிவருபவர்.

கண்டியில் இருந்து வெளிவந்த 'செய்தி' வார இதழின் யாழ்ப்பாணப் பிராந்திய செய்தியாளராக 1968 ஆம் ஆண்டு இணைந்து பத்திரிகைத்துறையில் பிரவேசித்தார். பின்பு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான 'ஈழநாடு' பத்திரிகையின் நிருபராக சேர்ந்து 1985 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.

வீரகேசரியின் புலோலி செய்தியாளராக 1972 ஆம் ஆண்டில் இணைந்துகொண்ட தில்லைநாதன் பின்னர் வடமராட்சி பிரதேசம் முழுமைக்குமான வீரகேசரியின் செய்தியாளராக நியமிக்கப்பட்டார். 1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரை அந்த பத்திரிகையின் யாழ்ப்பாணச் செய்தியாளராக பணியாற்றும் பொறுப்பும் அவருக்கு ஒப்படைக்கப்பட்டது.

'உதயன்' நாளிதழ் ஆரம்பிக்கப்பட்ட 27.11.1985 முதல் 2020 ஆம் ஆண்டு வரை வடமராட்சி செய்தியாளராக 36 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறந்த செய்தியாளருக்கான விருதை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் 2003 ஆம் ஆண்டில் வழங்கிக் கௌரவித்தது. நெருக்கடியான சூழ்நிலைகளில் யாழ்ப்பாணத்தில் அவர் ஆற்றிய செய்திச்சேவைக்காக சிறப்பு விருது அதே ஆண்டில் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தினால் வழங்கப்பட்டது.

அத்துடன் தில்லைநாதனின் சேவையைப் பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 'கலைப்பரிதி', 'கலைச்சாகரம்' என்ற பட்டங்களை வழங்கியது. வடமராட்சி பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலையங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் பலவும் தில்லைநாதனின் ஊடகசேவையைப் பாராட்டி கௌரவித்தன.

அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் அவர் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் தனது பங்களிப்புகளைச் செய்து வருகிறார். யுத்த கால நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் பயணித்து 55 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் ஊடகத் துறையில் பணியாற்றிவரும் மூத்த ஊடகவியலாளர் சி.தில்லைநாதன் அவர்களது ஊடக செயற்பாட்டினை சிறப்பிக்கும் வகையில் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தினரால் 'ஊடக சிகரம்' என்று சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.