பருத்தித்துறைக் கடலில் எல்லை தாண்டி மீன்பிடி: 12 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

பருத்தித்துறைக் கடற்பரப்பில்  எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களின் விளக்கமறியலைப் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை(03.01.2024) நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பருத்தித்துறைக் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த டிசம்பர் மாதம்-10 ஆம் திகதி 25 இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த படகின் உரிமையாளர் உள்ளிட்ட  13 இந்திய மீனவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சாதாரண சிறைத் தண்டனை எனும் நிபந்தனையின் அடிப்படையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.    

மற்றைய படகில் பயணித்த ஏனைய 12 இந்தியா தமிழகத்தின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கெதிரான வழக்கு விசாரணையின் போது படகின் உரிமையாளர் இல்லாத காரணத்தால் படகின் உரிமையாளரையும் குறித்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இணைத்துச் சந்தேகநபருக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் விளக்கம் வழங்க வேண்டியிருந்தமையால் 12 இந்திய மீனவர்களையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீரியல் வளத்துறைத்  திணைக்களத்தினரால் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

12 இந்திய மீனவர்களும் இன்றையதினம் மீண்டும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் எதிர்வரும்-10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.