சிறப்பிக்கப்பட்ட சுன்னாகம் கதிரமலைச் சிவன் முத்தேர் பவனி

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முத்தேர் பவனி நேற்றுத் திங்கட்கிழமை (06.05.2024) வெகுசிறப்பாகவும், மிகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.


 நேற்றுக் காலை வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சோமஸ்கந்தப் பெருமான், சொர்ணாம்பிகை சமேத பொன்னம்பலவாணேஸ்வரப் பெருமான், விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சண்டேஸ்வரப் பெருமான் ஆகிய தெய்வங்கள் சர்வ அலங்காரங்களுடன் உள்வீதியில் திருநடனத்துடன் அசைந்தாடி வலம் வந்தனர்.

காலை-07 மணியளவில் மேற்படி தெய்வங்கள் முத் தேர்களிலும் எழுந்தருளியதைத் தொடர்ந்து  சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க காலை-09 மணியளவில் முத்தேர்களின் பவனி ஆரம்பமானது.            

பிரதான சித்திரத் தேரின் வடத்தை ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து தொட்டிழுத்தனர். முத்தேர்களும் முற்பகல்-10.45 மணியளவில் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

முத்தேர் பவனி இடம்பெற்ற போது ஆண் அடியவர்கள் பலரும் அங்கப் பிரதிஷ்டை செய்தும், பெண் அடியவர்கள் பலரும் அடியளித்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.    

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றினர்.

இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை (07.05.2024) காலை தீர்த்தத் திருவிழாவும், இன்று இரவு கொடியிறக்கத் திருவிழாவும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந்)