மன்னார், பூநகரியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்ய அனுமதி!

மன்னார் மற்றும் கிளிநொச்சி பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை (07.05.2024)  அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியாவின் Adani Green Energy Limited நிறுவனத்தால் குறித்த பிரதேசங்களில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு கடந்த மார்ச் மாதம்-07 ஆம் திகதி  அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இதற்கமைய குறித்த நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய உத்தேச கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின் அலகொன்று கிலோவாட் மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதியான விகிதத்திற்கு அமைய அங்கீகரிப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக் கோரலை Adani Green Energy SL Limited நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.