தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழாலை இளைஞர்களின் முன்மாதிரியான பணி

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினர் ஏற்பாடு செய்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (13.01.2025) காலை-08 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை யாழ்.ஏழாலை தெற்கில் அமைந்துள்ள தனியார் வர்த்தக நிலைய மண்டபத்தில் ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் தலைவர் ரி.றூபேட் எமில்டன் தலைமையில் இடம்பெற்றது.    

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், கிராமத்தவர்கள், அயற்கிராமத்தவர்கள் மற்றும் தன்னார்வக் குருதிக் கொடையாளர்கள் என இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, தைப்பொங்கலை முன்னிட்டுப் பதினொராவது தடவையாக ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பு மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

(செ.ரவிசாந்)