‘வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்! அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும்


‘வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’  என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் இன்று 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது. 


சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று வெளியிட்டு வைத்தனர். 


பாதிக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம், பொதுச்சுடர் ஏற்றல், மலர் அஞ்சலியை தொடர்ந்து வரவேற்புரையை  மூத்த ஊடகவியலாளர் தி.எஸ் தில்லைநாதன்  நிகழ்த்தியிருந்தார்.


அதனைத் தொடர்ந்து வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதம குரு சோ தண்டாயுதபாணி தேசிகர், யாழ். மறைமாவட்டத்தின் மூத்த குருவும் முன்னாள் ஊரணி மயிலிட்டி பங்குத்தந்தையும், லண்டன் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இயக்குநருமான அருட்தந்தை தேவராஜன் அடிகள் ஆகியோர் அஞ்சலி உரையை ஆற்றினர்.


தொடக்க உரையை வல்வெட்டித்துறை முன்னாள் பிரஜைகள் குழுவின் செயலாளர் ந. ஆனந்தராஜ் ஆற்றினார். 


அதன் பின்னர் அறிக்கை அறிமுகமும் பிரதிகள் வழங்கலையும் தொடர்ந்து சிறப்புரைகளை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிறிட்டோ பெர்னாண்டோ மற்றும் வல்வெட்டித்துறை முன்னாள் பிரஜைகள் குழு தலைவர்  ச.செல்வேந்திரா ஆகியோர் ஆற்றியிருந்தனர்.  

நன்றி உரையினை  சிரேஸ்ட ஊடகவியலாளர் கு.மகாலிங்கம்  நிகழ்தியிருந்தார். 


இந்த நிகழ்வில்  சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.