கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாளை முத்தமிழ் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ்  மன்றம் நடாத்தும் முத்தமிழ் விழா நாளை வியாழக்கிழமை (19.10.2023) காலை-09 மணி முதல் மேற்படி கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் சங்கீத பூஷணம் பூத்தகொடி புகழ் செ.குமாரசாமி அரங்கில் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமெளலீசன் லலீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

மேற்படி விழா நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் பிரதம விருந்தினராகவும், துணுக்காய் வலய அழகியல் கல்வி உதவிக் கல்விப்  பணிப்பாளர் நாகரட்ணம் இராஜன் சிறப்பு விருந்தினராகவும், ழகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த   பொ. பிரசாந்தன், குடத்தனை அ.த.க பாடசாலை ஆசிரியை பாரத் வீணாவாஹினி, வேலுப்பிள்ளை அறக்கட்டளையைச் சேர்ந்த வே.கஜேந்திரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் முத்தமிழ் மன்றக் காப்பாளர் விரிவுரையாளர் கவிஞர்.வேல் நந்தகுமார் தொடக்கவுரையையும், சங்கீத பூஷணம் கே.எஸ். சிவஞானராஜா அரங்கத் திறப்புரையையும் நிகழ்த்தவுள்ளனர். 

முத்தமிழ் விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும், ஆசிரிய மாணவர்களின் நடனம், வில்லிசை, நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்வுகளும் நடைபெறுமெனக் கலாசாலையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.