ஏழாலை இளம் குடும்பஸ்தரிடம் இரண்டு லட்சம் ரூபா மோசடி: மக்களே அவதானம்!

யாழ்.ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (21.01.2025) இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து ஏமாற்றி இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.    

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,   

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல்-01.15 மணியளவில் குறித்த இளம் குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட  நபர் தாங்கள் டயலொக் ஒவ்விசிலிருந்து கதைக்கிறோம். போன வருஷம் டிசம்பர் மாதம்-21 ஆம் திகதி உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன் நீங்கள் மெசேஜ் பார்க்கவில்லையா? எனவும் வினாவியுள்ளான். அதற்கு அப்படியொரு தகவலை நான் பார்க்கவில்லை என இளம் குடும்பஸ்தர் பதில் வழங்கியுள்ளார். நீங்கள் மெசேஜ்கள் டிலிற் பண்ணியிருக்கிறீர்களா? என வினாவப்பட்ட போது அதற்கு இளம் குடும்பஸ்தர் ஆம் எனப் பதில் வழங்கியுள்ளார். 

இந் நிலையில் மெகா அதிர்ஷ்டத்திற்கான காலக்கேடு முடிவடையவிருப்பதால் தான் தற்போது உங்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு எடுத்துள்ளதாகத் தெரிவித்து உங்கள் வங்கி இலக்கத்தைக் கூறுமாறு கோரவே குறித்த இளம் குடும்பஸ்தரும் தனக்கு உண்மையிலேயே ஐந்து லட்சம் ரூபா கிடைத்திருப்பதாக எண்ணி மகிழ்ச்சியுடன் தனது வங்கி இலக்கத்தைத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் உங்களுக்கு மெசேஜ்ஜில் ஆறு இலக்கங்களைக் கொண்ட ஒரு மெசேஜ் வரும். அதனைத் தம்மிடம் கூறுமாறும் வினாவவே இளம் குடும்பஸ்தரும் அதனைக் கூறியுள்ளார். இதனையடுத்துக் குறித்த இளம் குடும்பஸ்தரின் வங்கிக் கணக்கிலிருந்து சடுதியாகப் பணத் தொகை குறைவடைந்து சென்றது.

இதனையடுத்துச் சுதாகரித்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர் புன்னாலைக்கட்டுவன் வடக்கில் தனது சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும்  வங்கிக்கு விரைந்து சென்று நடந்தவற்றைத் தெரிவித்து தனது சேமிப்புக் கணக்கின் செயற்பாடுகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளார். இதனால், அவரது எஞ்சிய பெரும்தொகைப் பணம் காப்பாற்றப்பட்டுள்ளது. இதன்பின்னர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

குப்பிழான் வடக்குப் பகுதியில் கட்டட விற்பனைப் பொருள் விற்பனை நிலையமொன்றை நடாத்தி வரும் 36 வயதான இளம் குடும்பஸ்தரே  இவ்வாறு மோசடிக்கு உள்ளானவராவார். 

இதேவேளை, அண்மைக் காலமாக இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் அதிகரித்திருக்கும் நிலையில் பொதுமக்களை அவதானமாகச் செயற்படுமாறு கல்வியிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.  

(செ.ரவிசாந்)