எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தேசியமக்கள் சக்திக்குத் தமிழ்மக்கள் தங்கள் ஆணையை வழங்கினால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் விரும்பியே தமிழ்த்தேசியத்தைக் கைவிட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்படும். எனவே, ஒட்டுமொத்தமாகத் தமிழ்த்தேசத்தின் உரிமைப் பயணம் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தான் தங்கியிருக்கிறது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சூளுரைத்துள்ளார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியப் பேரவையின் மாபெரும் இறுதித் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை (03.05.2025) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இளங்கதிர் மைதானத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் சற்று வித்தியாசமாக வாக்களிப்பதற்கு தற்போது ஆட்சியிலுள்ள தேசியமக்கள் சக்தியின் பிரச்சாரம் சற்று எடுபட்டுள்ளது என்பதை நாங்கள் மறுக்க முடியாது. கடந்த 76 வருடங்களாக ஆட்சி செய்த சிங்கள இனவாதக் கட்சிகள் திட்டமிட்ட வகையில் தமிழ்மக்களுக்கு எதிராகத் தான் செயற்பட்டார்கள். இவ்வாறான இனவாதக் கருத்துக்களால் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றதொரு தெளிவான செய்தியை எம் மக்களிடம் கூறினார்கள்.
சிங்கள மக்கள் போன்று வடக்கு, கிழக்கில் வாழக் கூடிய தமிழர், முஸ்லிம் மக்களுக்கும் விசுவாசமாகவும், நேர்மையாகவும் செயற்படுவது தான் தங்களின் ஒரேயொரு குறிக்கோள். இனவாதத்தை முற்றுமுழுதாக இலங்கைத் தீவிலிருந்து நிரந்தரமாக இல்லாமல் செய்வது தான் தங்கள் நோக்கமெனக் கடுமையான பிரச்சாரங்கள் மேற்கொண்டனர்.தற்போது தேசியமக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களாகியுள்ள நிலையில் அவர்கள் கடந்த 76 வருடகாலமாக மாறி மாறி ஆட்சிகளிலிருந்த சிங்கள ஆட்சியாளர்களை விட வித்தியாசமானவர்களாகச் செயற்பட்டுள்ளனரா? என்ற கேள்விக்கு நாம் பதில் தேடியே ஆக வேண்டும்.
அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்று கூறிய போதும் விடுவிக்கவில்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவோம் என்று கூறிய போதும் நீக்கவில்லை.மாறாகப் புதுச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாகக் கூறியுள்ளனர். பொறுப்புக் கூறல் விடயத்தில் எந்தவொரு நபர்களும் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர்.யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
இராணுவம் தனியார் காணிகளில் தங்கியிருக்க முடியாது. ஆகவே, அனைத்துத் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டுமெனத் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் 6000 ஏக்கர் தமிழ்த்தேசத்தின் வடமாகாணத்தின் கரையோர நிலப்பரப்பைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் இந்தச் சுவீகரிப்பு உறுதிப்படுத்தப்படும். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் ஒரே தடவையில் இவ்வளவு நிலப்பரப்பையும் சுவீகரிக்கவில்லை.
எனவே, இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் ஒரு முறைமையான ஆராய்ச்சி செய்து தான் தங்கள் வாக்குகளை வழங்க வேண்டும். அவ்வாறு செயற்படாவிடில் விளைவுகள் பாரதூரமானவையாக அமையும் என்றார்.