2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராகவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயர்நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று புதன்கிழமை (30.07.2025) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோட்டாபக்ச ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போதுள்ள பாதுகாப்புக் காரணங்களுக்காக தமது சேவை பெறுநர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு பதிலாக கொழும்பு நீதிமன்றமொன்றில் சாட்சியமளிக்கத் தயாராகவிருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
இதன்போது, மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த கோரிக்கையை இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பொருத்தமான உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவுக்கு அறிவித்தது.மனு தாரர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகேவும் இந்தக் கோரிக்கைக்குத் தமது இணக்கத்தை வெளியிட்டது. இதனையடுத்து மேன்முறையீட்டு மனுவின் விசாரணையை முடிவுறுத்துவதற்கு நீதியரசர்கள் ஆயம் முடிவு செய்தது.
இதேவேளை, கடந்த- 2011 ஆம் ஆண்டு டிசம்பர்-09 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல் செய்யயப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.