தேசிய பாடசாலைப் பாடத் திட்டத்தில் சட்டப் பாடத்தை இணைக்குமாறு வலியுறுத்தல்!

தேசிய பாடசாலைப் பாடத் திட்டத்தில் சட்டப் பாடத்தை இணைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதமர், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

சட்டம் அல்லது அதனுடன் தொடர்புடைய பாடத்தை ஆரம்பக் கல்வித் தரத்தில் முதன்மைப் பாடமாகவும், உயர்தரத்தில் விருப்பத்துக்குரிய பாடமாகவும் அறிமுகப்படுத்துவது அவசியம். இதன்மூலம் பாடசாலை மட்டத்தில் சட்டக்கல்வி பொறுப்புள்ள மற்றும் தகவலறிந்த பிரஜைகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். 

ஏற்கனவே பல்வேறு நாடுகள் தங்கள் பாடசாலைப் பாடத் திட்டத்தில் சட்டப் பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.இந் நிலையில் இலங்கையின் சட்ட மற்றும் கலாசாரச் சூழலுடன் ஒத்துப் போகும் சட்டக் கல்விக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயார் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.