யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குத் தாளையடிப் பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய்ப் பகுதியிலிருந்து இன்று திங்கட்கிழமை(18.08.2025) மதியம் வடமராட்சி கிழக்குத் தாளையடி கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர். பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த நண்பர்கள் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டிருந்தனர். நண்பர்களுடன் இணைந்து நீராடிக் கொண்டிருந்த குறித்த இளைஞன் கடலில் பல்டி அடித்த போது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாகச் சக நண்பர்கள் மீட்டு இளைஞனை உழவு இயந்திரத்தில் மருதங்கேணிப் பிரதேச வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்த போதும் அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் சக நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.