இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவுநாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) யாழில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று காலை-09 மணி முதல் யாழ். நகரிலுள்ள தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெறும். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர்.ஜி.எல்.பீரிஸ் கலந்து கொண்டு " சமஷ்டி முறையும் அரசியலமைப்புச் சீர்திருத்தப் பாதையும்" எனும் தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.
மாலை-04 மணியளவில் தெல்லிப்பழையில் அமைந்துள்ள சேமக்காலையில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை-05 மணியளவில் தெல்லிப்பழையிலுள்ள தந்தை செல்வாவின் இல்ல வளாகத்தில் செம்முகம் ஆற்றுகைக் குழுவின் 'மெளனத்தின் ஓலம்' எனும் தலைப்பிலான நாடக ஆற்றுகையும், கலந்துரையாடலும் நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

