உள்ளூராட்சித் தேர்தலுக்கு எதிரான மனு மீண்டும் ஒத்திவைப்பு!


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு முன்னாள் இராணுவ கேணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலான நீதிப் பேராணையைப் பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுநிலை இராணுவ கேணல்.டபிள்யூ.எம்.ஆர் விஜேசுந்தர தாக்கல் செய்த மனு இன்று வியாழக்கிழமை(23.02.2023) உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணையை  எதிர்வரும் மே மாதம்-11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இந்த மனு கடந்த 20 ஆம் திகதி எஸ் துரைராஜா மற்றும் சிரான் குணரத்ன உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது. குறித்த மனுவை ஆராய்வதற்காக முன்னர் திகதி குறிப்பிட்டப்படி இன்றைய தினமே மீண்டும் அழைக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. 

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றத்  தேர்தல் நடாத்தப்படுவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை எனச்  சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர் தேர்தலைப் பிற்போடுமாறு உத்தரவிடக் கோரியுமே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவின் பிரதிவாதிகளாகத் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பெயரிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.