கீரிமலை நகுலேஸ்வரர் பெருவிழா நிறைவு


ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.கீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(19.02.2023) இரவு-08.30 மணியளவில்  கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.

இரவு-07 மணியளவில் வசந்தமண்டப் பூசையைத் தொடர்ந்து நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர், விநாயகர், முருகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் வெளிவீதி உலா வலம் வந்தனர். கொடியிறக்க உற்சவத்தைத் தொடர்ந்து உள்வீதி உலா வலம் வரும் திருக்காட்சியும் இடம்பெற்றது. கொடியிறக்க உற்சவத்தில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இவ் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த-05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் 15 தினங்கள் இடம்பெற்றிருந்தது. 

கடந்த-18 ஆம் திகதி சனிக்கிழமை காலை-10.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை-06 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடந்தேறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  



(செ.ரவிசாந்)