சிறப்பு நாதஸ்வர, தவில் கச்சேரியுடன் ஊரெழு வீரகத்தி விநாயகரின் தேர் பவனி


யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய சுபகிருது வருட மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(05.03.2023) காலை சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று முன்தினம் காலை-08 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் திருநடனத்துடன் ஆலய  உள்வீதியில் எழுந்தருளிப் பின்னர் காலை-10 மணியளவில் சித்திரத் தேர்களில் எழுந்தருளினர்.

சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டுத் தீபாராதனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து  அடியவர்களின் அரோகராக் கோஷம்  முழங்க காலை-10.15 மணியளவில் சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமானது. ஆண் அடியவர்களும் பெண் அடியவர்களும் இணைந்து பிரதான தேரின் வடம் தொட்டிழுத்தனர்.

சித்திரத் தேர் பவனி வீதி  உலாவின் போது ஈழநல்லூர் பாலமுருகன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர, தவில் கச்சேரியும் நடைபெற்றது. இதன்போது ஆண் மற்றும் பெண் அடியவர்கள் பலரும் தமது நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர். கிரியா தத்துவநிதி சிவஸ்ரீ.சிவசுகுமாரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தேர்த்  திருவிழாக் கிரியைகளைச் சிறப்புற நிகழ்த்தினர்.    

            

பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் பக்திபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் விசேட அன்னதானமும் வழங்கப்பட்டது.



(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)