மாசிமக நன்னாளில் சிறிய பூத் தேரில் தெல்லிநகர் துர்க்காதேவி வீதி உலா

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் அம்பிகை அவதரித்த திருநாளான மாசிமகத்தை முன்னிட்டு மாசிமக விசேட உற்சவம் நேற்று முன்தினம்  திங்கட்கிழமை(06.03.2023) சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் அதிகாலை-05.30 மணியளவில் உஷக் காலப் பூசை ஆரம்பமாகி காலை-06 மணியளவில் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் மாசிமகத் தீர்த்தம் இடம்பெற்றது.

காலை-07 மணியளவில் கும்ப பூசை, காலை-08 மணியளவில் விசேட மஹா அபிஷேகம், முற்பகல்-10.30 மணியளவில் பூசை வழிபாடு என்பன இடம்பெற்றுத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடு, ஸ்வர்ணபத்ம புஸ்பார்ச்சனை என்பன இடம்பெற்றன. முற்பகல்-11.35 மணியளவில் துர்க்கை அம்பாள் சிறிய பூத் தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து உள்வீதி  உலா ஆரம்பமானது.          


இதேவேளை, மாசிமக நாளில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டதுடன் சில அடியவர்கள் பொங்கல் பொங்கிப் படையல் செய்தும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.              

(செ.ரவிசாந்)