மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வலியுறுத்து

மின்சாரக் கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை(04.04.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை குறைப்பு போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப மின் கட்டணமும் குறைய வேண்டும்.

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று  மாதங்களில் மின்சாரத் தேவை 18 சதவீதம் குறைந்துள்ளது. மின் தேவை குறைவதால் மின் உற்பத்தி மற்றும் வழங்கல் செலவும் குறைகிறது.

எனவே, இந்த வருடத்திற்கான மின் தேவை மின்சார சபையினால் சரியாக மதிப்பிடப்படவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவைக்கு பதிலாகத் தற்போது, குறைந்த தேவையே காணப்படுகின்றது. இதனால், மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.