உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தி!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்  தாக்குதல் நடாத்தப்பட்டு இன்று வெள்ளிக்கிழமையுடன் (21.04.2023) நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் இன்றையதினம் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.    

உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்ற ஆராதனைகளில் கலந்து கொண்ட கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து 2019 ஆம் ஆண்டில் இதேநாளில் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

நாட்டின் மூன்று தேவாலயங்கள், கொழும்பின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் என ஏழு  இடங்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 269 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. சிலர் அங்கவீனர்களாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.