வெகுசிறப்பாக நடைபெற்ற குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் தேர்த் திருவிழா

யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(04.05.2023) வெகுசிறப்பாக நடைபெற்றது.

காலை-08.30 மணியளவில் வசந்தமண்டப் பூசை நடைபெற்றதைத் தொடர்ந்து திருநடனத்துடன் கெளரி அம்பாள் உள்வீதியில் எழுந்தருளி அதனைத் தொடர்ந்து காலை-10 மணியளவில் சித்திரத் தேரில் ஆரோகணம் செய்தாள்.



சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பண்ணுடன் ஓதும் நிகழ்வும், சிதறு தேங்காய் உடைக்கும் நிகழ்வும் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்-10.45 மணியளவில் சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமானது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்தனர்.  


சித்திரத் தேர் வீதி உலா இடம்பெற்ற வேளையில் வெயிலுக்கு மத்தியிலும் ஆண் அடியவர்கள் பலரும் பறவைக் காவடிகள், செதில் காவடிகள் எடுத்தும், அங்கப் பிரதட்சணை செய்தும், பெண் அடியவர்கள் பலரும் அடியளித்தும், கற்பூரச் சட்டிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். 

இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கடந்த மூன்று வருடங்களுக்குப் பின்னர் இவ் வருட மஹோற்சவத்தில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் அம்பாள் அடியவர்கள் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர்.    


இதேவேளை, சித்திராப் பெளர்ணமி தினமான நேற்று வெள்ளிக்கிழமை(05.05.2023) முற்பகல்-11 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும்,  நேற்று இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)