சிறப்பாக இடம்பெற்ற ஏழாலை அத்தியடி விநாயகர் தேர்த் திருவிழா

'ஏழாலை' எனும் கிராமம் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் முதன்மை வழிபாட்டுத் தெய்வமாக விளங்கும் ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா வைகாசி விசாக நன்னாளான நேற்று வெள்ளிக்கிழமை(02.06.2023) சிறப்பாக இடம்பெற்றது.


நேற்றுக் காலை-09 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் உள்வீதியில் திருநடனத்துடன் எழுந்தருளிக் காலை-10 மணியளவில் ஆலயத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சித்திரத் தேரில் எழுந்தருளினார்.

சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு, விசேட தீபாராதனை இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்கக் காலை-10 மணியளவில் சித்திரத்தேர் பவனி ஆரம்பமானது.  ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்தனர்.தேர்த் திருவிழாவை முன்னிட்டுச் சிறப்பு மேளக் கச்சேரியும் இடம்பெற்றது.   


கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் அடியவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் குளிர்மையான பானங்கள் பரிமாறப்பட்டதுடன் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 



இதேவேளை, மேற்படி ஆலய மஹோற்சவத்தில் இன்று சனிக்கிழமை (03.06.2023) காலை-10.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும் இன்று இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)