குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் விசேட அறநெறிச் சொற்பொழிவும் கூட்டுப் பிரார்த்தனையும்


 யாழ்.மாவட்டத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி மாணவர்களை அறநெறிக் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் நோக்கில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் விசேட அறநெறிச் சொற்பொழிவும் கூட்டுப் பிரார்த்தனையும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(21.07.2023) மாலை-04 மணி முதல் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.


தீபாராதனை வழிபாடுகளைத் தொடர்ந்து குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவச் சிறார்கள் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ஆன்மிகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான ஆன்மீக ஒழுக்க விழுமியநெறி எனும் தலைப்பில் விசேட அறநெறிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களிடம் சொற்பொழிவிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த மாணவர்களுக்குப் பரிசில்களும் , பாராட்டுக்களும் வழங்கப்பட்டன. ஓய்வுநிலைக் கிராம சேவகர் சோ.பரமநாதனும் கலந்து கொண்டு உரையாற்றினார்.


    

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொங்கலும் பரிமாறப்பட்டது.  


     (செ. ரவிசாந்)