தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆறாம் கட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டம்

வலிகாமம் வடக்கின் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று  செவ்வாய்க்கிழமை(29.08.2023) மாலை-04.30 மணியளவில் விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே தனியார் காணியில் ஆறாம் கட்டமாக மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டவிரோத திஸ்ஸ விகாரையை உடனே அகற்று!, தையிட்டி மண் தமிழர் சொத்து  உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, முழுநோன்மதி தினமான நாளை புதன்கிழமை(30.08.2023) இரவு-07 மணி வரை குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுமென`த் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.