சாவகச்சேரியில் கோரவிபத்து: யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு!


சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோவிலுக்கு அருகில் யாழ்ப்பாணம்- கண்டி நெடுஞ்சாலையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை (13.08.2023) முற்பகல்-11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மாட்டு வண்டிச் சவாரிப் போட்டிக்காக வண்டி மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியுடன் மோட்டார்ச் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் மாணவன் செலுத்திச் சென்ற மோட்டார்ச் சைக்கிளும் கடும் சேதங்களுக்கு உள்ளானது.       

சாவகச்சேரியைச் சேர்ந்த சிவபாலன் பிரவீன்(வயது-19)  என்ற மாணவனே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.