யுத்தம் முடிந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும் நீதி நிறைவேற்றப்படாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள்!


யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டேர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இன்றையதினம் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியைத் தயார்  செய்ய வேண்டும்.

முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளது. 

இதேவேளை, 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.