திலீபனின் வாகன ஊர்தி மீதான தாக்குதலுக்கு மணிவண்ணன் கடும் கண்டனம்!

தியாகதீபம் திலீபன் அண்ணாவின் உருவப்படத்தைத் தாங்கிய வாகன ஊர்தியைப் பொலிஸார்  வேடிக்கை பார்க்கச் சிங்களக் காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும், அவ் வாகன அணியோடு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டித் தனம். இந்த ஈனச் செயலை வன்மையாகக்  கண்டிப்பதாக யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஊடகச் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,      

உண்ணாநோன்பிருந்து அகிம்சைப் போர் தொடுத்து ஈகச் சாவடைந்ந உத்தமனை நினைவு கூரக் கூட இந்த மண்ணில் அனுமதி இல்லை என்பதை இது காட்டி நிற்கின்றது. இச் செயல் இந்த நாட்டில் ஒருபோதும் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதையும், தமிழ்மக்கள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதையும் பட்டவர்த்தனமாகக் காட்டுகின்றது.

இதனைச் சர்வதேசம் கண்டும் காணாதிருப்பது தான் வேதனையானது எனவும் அந்த ஊடகச் செய்திக் குறிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.