நெடுந்தீவுக் கடலில் கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றுச் சனிக்கிழமை(28.10.2023) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் அடுத்தமாதம்-08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.     

நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றுச் சனிக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இரண்டு படகுகளில் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களைக் கைது செய்தனர். அத்துடன் அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய படகுகளையும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கடற்படையினர் கொண்டு வந்தனர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்.மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர். இதன்போது நீதவான் விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.