அச்சுவேலி - வல்லையில் 2000 பனம் விதைகள் நாட்டும் செயற்திட்டம் முன்னெடுப்பு

 


யாழ்ப்பாணம் - வல்லை வெளிப்பகுதியில் இன்று 09.10.2023 பனை நடுகை செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இன்று காலை 9.30 மணியளவில் யாழ். அச்சுவேலி - வல்லை சந்திக்கு அண்மையாக உள்ள வெள்ள நீர் தடுப்பணையின் சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள இரண்டு பக்கங்களிலும் பனம் விதைகள் நடுகை செய்யப்பட்டன. 


செலிங்கோ லைப்  நிறுவனத்தின் அச்சுவேலிக் கிளையினரின் ஏற்பாட்டில் "கற்பக தருவை நாட்டுவோம். கவினுறு சூழலை ஆக்குவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற 2000 பனம் விதைகள் நாட்டும் குறித்த செயற்திட்டமானது செலிங்கோ லைபின் அச்சுவேலிக் கிளை முகாமையாளர்களான பிரதீப், நிதிவண்ணன் ஆகியோரின் தலைமையில், பனை அபிவிருத்தி சபையின் ஓய்வுநிலை அலுவலரான பன்னீர்செல்வம் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பனை அபிவிருத்தி சபையின் மாவட்ட முகாமையாளர் நிருஷன், பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலிக் கிளையின் முகாமையாளரான வரதராஜா, அச்சுவேலி மத்திய கல்லூரியின் அதிபர் ரவிச்சந்திரன் மற்றும் மாணவர்கள், அச்சுவேலி பொதுச் சுகாதார பரிசோதகரான சர்மிலன், வலிகிழக்கு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரான கபிலன், அச்சுவேலி தெற்கு கிராம அலுவலரான அனுஷன், யாழ்ப்பாணம் செலிங்கோ லைபின்    ஆயுள் செயற்பாட்டு முகாமையாளரான சிவோதயன், செலிங்கோ லைபின் பிராந்திய விற்பனை முகாமையாளரான ராஜகோபால்  மற்றும் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

சிறப்பு விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து உரைகளும் இடம்பெற்றன. போர்க்காலத்தில் ஆயிரக்கணக்கான பனைகள் அழிக்கப்பட்டன. பல்லாண்டு பயிரான பனை விதைகளை இங்கே நடுகை செய்வதன் மூலம் எதிர்கால தலைமுறை அதன் பயன்களை பெற்றுக் கொள்ளும் எனவும், தாம் தொடர்ந்தும் இத்தகைய பசுமை பணிகளை முன்னெடுக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கருத்துகளை பகிர்ந்திருந்தனர்.