நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கு நீதி கோரி யாழில் நாளை மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்


முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கு நீதி கோரி மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நாளை புதன்கிழமை(04.10.2023) யாழில் இடம்பெறவுள்ளது.  

மருதனார்மடத்தில் நாளை காலை-09 மணிக்கு மனித சங்கிலிப் போராட்டம் ஆரம்பமாகி நாளை காலை-10 மணியளவில் யாழ்.நகரில் நிறைவடையவுள்ளது. 

எனவே, இந்தப் போராட்டத்தில் மாபெரும் மனிதச் சங்கிலியாகக் கைகோர்த்து நீதி கோரிடத்  திரண்டு வாருங்கள் என உங்கள் அனைவரையும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளாகிய நாம் உரிமையுடன் அழைப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த்தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இதேவேளை, குறித்த போராட்டத்திற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். மக்களை நாளைய போராட்டத்தில் அணிதிரளுமாறும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.