யாழ், கிளிநொச்சியில் இடம்பெயர்ந்தவர்களை அடுத்த ஆண்டுக்குள் மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினை தொடர இடமளிக்க முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025 ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்.வருகை தந்த நிலையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை(04.01.2024) மாலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. 

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.