கொக்குவில் பிரம்படியில் சாந்தனுக்கு அஞ்சலிப் பதாகை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அண்மையில் உயிர் நீத்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொக்குவில் பிரம்படிச் சந்தியில் கொக்குவில் பிரம்படிப் படுகொலை ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் அஞ்சலிப் பதாகையொன்று கொக்குவில் பொற்பதி இளைஞர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சாந்தனின் உருவப்படத்துடன் கூடிய குறித்த அஞ்சலிப் பதாகையில் வீரவணக்கம் எனப் பெரிய சிவப்பு வர்ண எழுத்தால் தலைப்பிடப்பட்டு தாய் மண்ணில் வித்துடலாய்த் தன் தாய்மடியில் வந்து சேர்ந்த நிரபராதி சாந்தன் அண்ணாவின் புகழுடலிற்கு எமது கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றோம். விழி நிறைந்து நீராக வலி மிகுந்து கனமாக கலங்கி நிற்கும் உறவுகளோடு உறவுகளாக உம் ஆன்மா அமைதி பெற இறைஞ்சுகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.