சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கொக்குவிலில் 20 ஆவது தடவையாக உயிர்காக்கும் பணி

கொக்குவில் பொற்பதி இந்து விளையாட்டுக் கழகம் வருடாந்தம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்து நடாத்தி வரும் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம்  சனிக்கிழமை (13.04.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இருபதாவது தடவையாக இடம்பெற்ற இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் கொக்குவில் பொற்பதி இந்து விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொற்பதி அறிவாலய நிர்வாகத்தவர்கள், கிராமத்தவர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பெறுமதியான ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினருக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 





(செ.ரவிசாந்)