சிறப்பிக்கப்பட்ட குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் தேர்த் திருவிழா

குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்றுத் திங்கட்கிழமை (22.04.2024) வெகுசிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.


நேற்றுக் காலை-08.45 மணியளவில் வசந்தமண்டப் பூசை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து திருநடனத்துடன் கெளரி அம்பாள் உள்வீதியில் எழுந்தருளி அதனைத் தொடர்ந்து சித்திரத் தேரில் ஆரோகணம் செய்தாள்.

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பண்ணுடன் ஓதப்பட்டுச் சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்-11 மணியளவில் சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமானது. ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்தனர்.  

சித்திரத் தேர் வீதி உலா இடம்பெற்ற வேளையில் வெயிலுக்கு மத்தியிலும் ஆண் அடியவர்கள் பலரும் பறவைக் காவடிகள் எடுத்தும், அங்கப் பிரதட்சணை செய்தும், பெண் அடியவர்கள் பலரும் அடியளித்தும், பாற்காவடிகள் மற்றும் கற்பூரச் சட்டிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.  

இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக குப்பிழானைச் சேர்ந்த புலம்பெயர் தேசத்து அடியவர்கள் பலர் இவ் வருடத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.      

இதேவேளை, இவ் ஆலய மஹோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (23.04.2024) நண்பகல்-12 மணியளவில் ஆலயத்தின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ள புனித தீர்த்தக் கேணியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந்)