சிறப்பிக்கப்பட்ட தாவடி அம்பலவாண வேத விநாயகர் சித்திரத்தேர்ப் பவனி

யாழ். தாவடி ஶ்ரீ அம்பலவாண வேத விநாயகர் ஆலய சோபகிருது வருட மஹோற்வப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) காலை வெகு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.   

வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய தெய்வங்கள் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளி உலா வந்தனர். இரு தெய்வங்களும் சித்திரத் தேர்களில் ஆரோகணித்ததைத் தொடர்ந்து சித்திரத் தேர்கள் தடையின்றிப் பவனி வர இறையருள் வேண்டி திருப்பல்லாண்டு ஓதப்பட்டுச் சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டன.  



அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க காலை-08.30 மணியளவில்  சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமானது. பெண் அடியவர்கள் பலரும் கற்பூரச் சட்டிகள் எடுத்துத் தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர். தேர்த் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


(செ.ரவிசாந்)