பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் விடுத்துள்ள அறைகூவல்!

இன்று எமது தேசம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான ஆக்கிரமிப்புச் சூழ்நிலையில் மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜா போல் ஆயிரம் ஆயிரம் தேசப் பற்றாளர்களை உருவாக்கினால் தான் எமது தேசத்தினையும், மக்களினையும் மீட்க முடியும் என்பதே நிதர்சனம். மருத்துவர் ஜெயகுலராஜாவின் மறைவிற்கு இறுதி வணக்கம் செலுத்தும் அதே தருணத்தில் அன்னாரின் சுதந்திரத் தேசக் கனவினை நனவாக்க நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம் எனப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ஜெயகுலராஜாவின் மறைவையொட்டிப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜா தனது வாழ்நாளில் அதிகமான காலப்பகுதியை தேச விடுதலைப் பணிக்காக அர்ப்பணித்தவர்.  ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தின் ஆரம்பம் முதலே தன்னை தமிழினத்தின் ஒப்பற்ற உயரிய உன்னத விடுதலைப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்து தனது தியாகம் நிறைந்த பணியினாலும், போர்க்காலங்களில் மக்கள் துயர்துடைப்புப் பணிகளிலும், மருத்துவ சேவையிலும் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதன் மூலம் எம்மின மக்களின் உள்ளங்களிலும், எம் தேசத் தலைவரின் இதயத்திலும் நீங்காத இடம்பிடித்தன் மூலம் எம் தேச ஆன்மாவில் நீக்கமற நிலைத்து ஈழத்தமிழர் வரலாற்றில் தனிமனித சரித்திரமாக மிளிர்கின்றார். மருத்துவர் ஜெயகுலராஜாவின் மறைவு தமிழர் தேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு எமது ஆத்மார்த்தமான அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்து நிற்கின்றோம்.

இளம் மருத்துவராக ஜெயகுலராஜா பணிபுரிந்து கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையின் உச்சநிலையாகத் தமிழின ஒடுக்குமுறையின் அடிமைச்ச சாசனமான 1972 இல் அன்றைய பேரினவாத அரசினால் கொண்டு வரப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் அரச உத்தியோத்தராகச் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்துத் தனது இனமான கொள்கைக்கு முன்பாகத் தனது தொழிலை துச்சமென நினைத்துத் தூக்கி எறிந்த இனமான செம்மலாவார்.

தாயகத்தில் பேரினவாத ஆக்கிரமிப்பும், அடக்குமுறையும் உச்சம் பெற்றிருந்த நிலையில் தனது உயிரைக் கூட ஒரு பொருட்டாக எண்ணாது ஈழத்தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் தனது மருத்துவப் பணியினையும், மனிதநேயப் பணியினையும் மிக அர்ப்பணிப்புடன் வழங்கினார்.

எடுத்துக்காட்டாக 1982 இல் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த போராளிகள் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாது. ஏனென்றால், இராணுத்தினரால் இலகுவாக அடையாளம் காண முடியும். இவ்வாறான ஆபத்து நிறைந்த சூழலில் அவர்களைத் தான் பணியாற்றிய திருச்சபை மருத்துவமனையாகிய புத்தூர் புனித லூக்கா மருத்துமனையில் சிகிச்சையளித்து தனது சகோதரர் அருட்தந்தையாகப் பணியாற்றிய புன்னாலைக்கட்டுவன் நல்லாயன் ஆலயத்தில் பாதுகாத்தார். இதன் விளைவாக இவரும், அவரின் சகோதரர் வணபிதா.ஜெயதிலகராஜாவும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டனர்.

1983 இல் தமிழினத்துக்கு எதிராக நடந்த அரச பயங்கரவாதத்தின் கொலை வெறியாட்டமான வெலிக்கடைப் படுகொலையிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிப் பின்னர் மட்டக்களப்புச்  சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுப் பின்னர் மட்டுச் சிறையுடைப்பில் சிறை மீண்டு தமிழகம் சென்றார்.

தமிழகத்திலும் தனது மானிடநேய மருத்துவப் பணியிலும் மக்கள் துயர்துடைப்பு பணியினையும் தொடர்ந்தார். அங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று ஈழஅகதிகள் மத்தியில் அர்ப்பணிப்பு மிக்க பணியாற்றினார். 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் தம்பதிகளுடன் தாயகம் திரும்பி மீண்டும் தாயகத்தில் தனது உயரிய பணியினைத் தொடர்ந்தார்.

கடும் போரும், வன்முறைகளும் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் தனது அர்ப்பணிப்பு மிக்க பணிகள் மத்தியிலும் பல மக்கள் அமைப்புக்களின் தலைமைப் பொறுப்புக்களை ஏற்றுச் சிறப்பான தலைமைத்துவத்தினை வழங்கியவர். எடுத்துக்காட்டாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யாழ். வை.எம்.சி.ஏ, யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் என்பவைகளின் தலைவராகச் செயற்பட்டுப் போர் நெருக்கடி மிக்க காலங்களில் சிறப்பான வழி நடத்தலையும், மக்கள் மத்தியில் நம்பிக்கையினையும் கொடுத்தவர். இதுமாத்திரமன்றி போர்க் களங்களில் மருத்துவப்பணியாற்றப் பல கள மருத்துவர்களைப் பயிற்சியளித்து உருவாக்கிப் போர்க்கள உயிர்காப்புப் பணிகளைச் செம்மையாக்கியவர். கடும் போர் நெருக்கடிகள் மத்தியிலும் எம்தேசக் கட்டுமானத்தின் மைல்கல்லாகத் தமிழீழ மருத்துவக் கல்லூரியின் உருவாக்கத்திலும், அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்துச் செயற்பட்டவர்.

1995 இல் இராணுவ ஆக்கிரமிப்பினால் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து சென்று வன்னிப் பெருநிலப்பரப்பில் தனது பணியினைத் தொடர்ந்தார். அக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டச் சுகாதார வைத்தியப் பொறுப்பதிகாரியாகப் பொறுப்பேற்றுப் பல்வேறு நெருக்கடிகள், சவால்கள் மத்தியில் கால்நடையாகவும் துவிச்சக்கரவண்டியிலும் பயணித்து தனது மனிதநேயப் பணியினைத்  தொடர்ந்தவர்.  

அதேவேளை வெண்புறா என்கின்ற செயற்கைக்கால் பொருத்தும் மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியேற்றுப் போரின் போது கால்களை இழந்த அனேகருக்கு செயற்கைக்கால் பொருத்தக் காரணமாக அமைந்தார். போரினால் மிகக் கடுமையாக அழிவடைந்த முல்லைத்தீவு மண்ணில் சிறுவர்களை மகிழ்வூட்ட தனது சொந்த செலவில் மாவீரர் நினைவு பூங்காவை (விலங்கியல்) நிறுவி சிறுவர்களுக்கான சிறந்த மகிழ்வூட்டும் பொழுதுபோக்கு களத்தை உருவாக்கியவர். இப்படியாக எம் இனத்திற்காக இவர் ஆற்றிய எண்ணிலடங்காப் பணிகளை எழுதிக் கொண்டே செல்லலாம்.

தனது அறிவை, ஆற்றலை பன்முக ஆளுமையினை தேச விடுதலைக்காக அர்ப்பணித்து அரும்பாடுபட்டுப் பணியாற்றிய ஓர் தியாகச் செம்மலை எம் தேசம் இன்று இழந்து நிற்கிறது. 

தேசவிடுதலை என்கின்ற உயர்ந்த இலட்சியத்துக்காக வாழ்ந்து அதற்காக உழைத்த உன்னதமான மனிதர்களை சாவுகள் ஒருபோதும் காவு கொள்வதில்லை. எம் தேசத்தின் ஆன்மாவிலும், தேசமக்களின் மனங்களிலும் நிரந்தரமாக வாழ்வார்கள் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.