வேட்பாளர்கள் பிரச்சாரங்களை முரண்பாடுகளின்றி மேற்கொள்வதை எதிர்பார்க்கின்றோம்!

 


எதிர்வரும்-14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இம் முறை யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 396 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆதலால், வேட்பாளர்கள் சட்டங்கள் மற்றும் சுற்றுநிருபத்திற்கு அமைய ஜனநாயக ரீதியில் பிரச்சார நடவடிக்கைகளை எதுவிதமான முரண்பாடுகளுமின்றி  ஆரோக்கியமாக மேற்கொள்வதனை எதிர்பார்க்கின்றோம் என யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) முற்பகல்-10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களுக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்படவுள்ள 48 வாக்கெண்ணும் நிலையங்களுக்கும்,  17 அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் மற்றும் பெறுபேறு தயாரித்து வெளியிடும் நிலையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்களைச் சரியான பொறிமுறையூடாகச் சட்டத்தின் மூலம் நியமித்து நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படச் சிறப்பான ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.

இம் முறை யாழ்.மாவட்டச் செயலகத்தில் இயங்கும் முறைப்பாட்டுப் பிரிவுக்கு மேலதிகமாக சாவகச்சேரி, சண்டிலிப்பாய் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் முறைப்பாட்டுப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத் தேர்தல் உதவி ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை முன்வைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.