யாழ்.பல்கலைக்கழகத்தில் ஓவியக் காட்சி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் மாணவர் அமைப்பாகிய கலைவட்டத்தின் ஏற்பாட்டில் 'வேர்களும் தடங்களும்: புலப்பெயர்வூடும் ஞாபகத்தினூடும் ஓர் பயணம்' எனும் ஓவியக் காட்சி நாளை செவ்வாய்க்கிழமை (04.03.2025) மாலை-03 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறைக் கலைக்கூடத்தில் ஆரம்பமாகிறது.  

குறித்த காட்சியில் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து தென் அயர்லாந்தில் வசித்து வரும் காண்பியக் கலைஞரான அனுசியா சுந்தரலிங்கத்தின் புலப்பெயர்வு அனுபவம் மற்றும் ஞாபகங்களை வெளிப்படுத்தும் படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இக்காட்சியானது எதிர்வரும்-12 ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது. ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் முற்பகல்-10 மணி முதல் மாலை-05 மணி வரை பார்வைக்காகக் கலைக்கூடம் திறந்திருக்கும். இக் காட்சியினைப் பாடசாலை மாணவர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் பார்வையிட முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

இந் நிகழ்வின் தொடராக நாளை மறுதினம் புதன்கிழமை (05.03.2025) மாலை-03 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைக்கூடக் கருத்தரங்கு மண்டபத்தில் கலைஞரின் உரையும் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.