எந்தவொரு வரலாறும் 30 வருடங்கள் ஒரே பாதையில் பயணிக்காது. மிகப் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும். 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஆரம்பித்த ஆயுதப் போராட்டம் 1980, 1983 ஆம் ஆண்டுகளில் முனைப்புப் பெற்று 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வருகிறது. அதன்பின்னர் தற்போது முன்னெடுக்கப்படும் அகிம்சைப் போராட்டத்தில் பாதி முடிவுக்கு வந்து விட்டது. இந்தப் பாதி வரலாற்றுச் சுழற்சியில் பெரும் அரசியல் பிரளயங்கள் எம் தமிழர் அரசியலில் நிகழ்ந்திருக்கின்றன. அடுத்து வரும் 15 வருடங்களுக்குள் இது வேறொரு திசையை நோக்கி நகர்த்தும். இந்த 15 வருடங்களின் முடிவில் ஆழமான, புதிய தலைமைத்துவம் தமிழினத்திற்குக் கிடைக்கும். இதற்காக நாங்கள் இன்னும் 15 வருடங்களுக்குக் காத்திருக்க வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா தெரிவித்துள்ளார்.
யாழ்.மல்லாகம் மகா வித்தியாலயத்தின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை (27.05.2025) முற்பகல் மேற்படி பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்து எங்களுக்குக் கிடைக்கின்ற தலைமைத்துவத்தைச் சரியாகப் பயன்படுத்திச் செயற்படுவதன் மூலம் தான் தமிழினத்துக்கான விடுதலையும், சமூக சமத்துவமும் தங்கியிருக்கின்றது.
சுமார் 60 வருட ஜனநாயகப் போராட்டம், அதற்குப் பின்னர் 30 வருட ஆயுதப் போராட்டம் என நூற்றாண்டு கடந்த தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தில் இதுவரை ஒரு தேர்ந்த தலைவரை ஜனநாயக அரசியலில் சந்திக்க முடியாமலிருப்பது தமிழினத்தின் துர்ப்பாக்கியம். தமிழினம் கடந்த காலங்களில் பல விலைகளைக் கொடுத்திருந்தாலும் தமிழினத்தின் தலைவர் இவர் தான் என்று சுட்டிக்காட்ட முடியாதளவுக்குப் பரிதாபகர நிலையில் தற்போது நாம் உள்ளோம்.
இதற்குக் காரணம் முன்னர் எம்மத்தியில் சரியானதொரு பயிற்சிக் களம் காணப்படவில்லை. எனினும், தற்போது பாடசாலைகளில் நாடாளுமன்ற அமர்வு மூலம் மாணவர்களுக்குச் சரியான பயிற்சிக் களம் தரப்படுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.