நீண்டதூரப் பேருந்து சேவைகளுக்குப் பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஆறு மணி நேரத்திற்கும் மேலான எந்தவொரு நீண்டதூரப் பயணத்திற்கும் 2 வெவ்வேறு பேருந்துச் சாலைகளின் ஒருங்கிணைப்புடன் 2 பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன தெரிவித்துள்ளார்.
சாரதிகளின் சோர்வைக் குறைத்து சிறந்த மேற்பார்வையை உறுதி செய்வதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறைசார் அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரவு நேரங்களில் பயணிக்கும் நீண்டதூரசேவைப் பேருந்துகளை விசேட சோதனைக்கு உட்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.