வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது தெற்கில் எதிராக குரல்!

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும் போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை தற்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (27.05.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

யாழ். மாவட்டத்துக்கான குடிதண்ணீர்ப் பிரச்சினை தொடர்பில் வடக்கு ஆளுநர் குறிப்பிட்டார். கடல்நீரைச் சுத்திகரிக்கும் செயற்திட்டத்தின் ஊடாக குடிதண்ணீர் வழங்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான செலவு அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர் மாற்றுத் திட்டங்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறிவரும் நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு பொறிமுறை இல்லை எனவும், இதன் காரணமாகப் பல சவால்களை எதிர்கொள்வதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.