இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுமெனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை (21.05.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அரசாங்கப் பாடசாலைகளில் 1 – 5ஆம் வகுப்பு வரை 4240 சிங்கள மொழி ஆசிரியர் வெற்றிடங்களும், 2827 தமிழ்மொழி ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன. 6 – 11ஆம் வகுப்பு வரை 11,274 சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும், 6121 தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன.மேல் மாகாணத்தில் மட்டும் அரசாங்கப் பாடசாலைகளில் 1 – 5ஆம் வகுப்பு வரை 1310 சிங்களமொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும், 302 தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும், 6 – 11ஆம் வகுப்பு வரை 1325 சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும், 397 தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன.
மொத்தமாக, நாடு முழுவதும் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன.கல்வி அமைச்சில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் போது பரீட்சை முறை மூலம் நிரப்ப அரசாங்க சேவை ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் சேர்ப்பது தொடர்பாக தற்போது நீதிமன்ற வழக்கு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த ஆண்டு இறுதிக்குள் தற்போதுள்ள வெற்றிடங்களில் குறிப்பிட்டளவு தொகையையாவது நிரப்ப அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.