யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள அம்மன் ஆலயமொன்றின் வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா நேற்றுப் புதன்கிழமை (07.05.2025) இரவு பெருமளவு அடியவர்களின் பங்குபற்றுதலுடன் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இந் நிலையில் தெற்கிலிருந்து கொண்டு வரப்பட்ட யானைகள் திருமஞ்சத்தின் முன்பாக அழைத்து வரப்பட்டுள்ளது. இதன்போது திருமஞ்சம் முன்பாக வெடிகள் கொளுத்தப்பட்டுத் தீப்பந்த விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
இந்நிலையில் யானை திடீரென மிரண்டதில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் யானை காலை மிதித்ததில் இணுவிலைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்மணியொருவர் ஒரு காலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, ஆலயங்களைக் கேளிக்கை கூடாரங்களாக மாற்ற முனைய வேண்டாமெனக் குறித்த செயற்பாட்டுக்குச் சமூக ஊடகங்களில் எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன.